மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அமராவதி ஆற்றில் தடுப்புகள் அமைப்பு
கரூர் :கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றில் பக்தர்கள் வசதிக்காக, மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல், கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. 16ல் பூச்சொரிதல் ஊர்வலம், 18ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.நேற்று யானை வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நாளை தேரோட்ட விழா நடக்கிறது. பிறகு, கரூர் அருகே, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. வரும், 28ல், கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடக்க உள்ளது. அப்போது, ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் செல்வர். இதனால், அமராவதி ஆற்றுப்பகுதியில், பக்தர்கள் வசதி மற்றும் பாதுகாப்புக்காக, மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.