கரூர் மணிவாசகம் கொலைக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: விஜயபாஸ்கர்
கரூர்:''கரூர் அருகே, மணல் கொள்ளை பிரச்னையில் நடந்த மணிவாசகம் கொலை சம்பவத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், வாங்கல் காவிரியாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்பாக மணிவாசகம் என்பவர் கடந்த, 14 இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, வெங்கடேஷன் உள்பட, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், மணிவாசகத்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் மணல் கொள்ளை நடக்கிறது. இதை தடுக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில் கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம், பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால், மணல் கொள்ளை பிரச்னையில், மணிவாசகம் கொலை நடந்திருக்காது. காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், மணிவாசகம் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், பாலகிருஷ்ணன், புகழூர் நகர தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட, நிர்வாகிகள் உடனிருந்தனர்.