வியாபாரிகளுக்கு கடன் தொடர்பான ஆலோசனை
குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பகுதியில் உள்ள, சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, லோக் கல்யாண் மேளா திட்டத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறுவது சம்பந்தமாக, மேட்டுமருதுார் சமுதாய கூடத்தில் டவுன் பஞ்., அலுவலகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின் கீழ் குளித்தலை எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் திவ்ய பிரசாந்த், பணிக்கம்பட்டி கனரா வங்கி கிளை மேலாளர் கிரண்குமார் ஆகியோர், சாலை ஓரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு குறைந்தது 10 ஆயிரம் முதல் கடன் வழங்க உள்ளதாகவும், பெற்ற கடனை தவணையின் அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.சாலையோர வியாபாரிகள் மற்றும் டவுன் பஞ்., கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.