நீரேற்று நிலைய மராமத்து பணிக்கு நிதி வழங்கல்
கரூர், ஜன. 4-கரூர் மாவட்ட புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நீரேற்று நிலைய மராமத்து பணிக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். நிறுவனம் சார்பில், வாய்க்கால் துார்வாருதல், கால்நடை மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அதில், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்.,ல், அமைந்துள்ள ஒரத்தை திட்ட நீரேற்று பாசனம் மூலம், 600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது, இத்திட்டத்தின் மூலம், 250 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.ஒரத்தை திட்ட நீரேற்று நிலையத்தை மராமத்து பணி செய்யவும், பழுதடைந்த மின் மோட்டார்களை சரி செய்திட காகித நிறுவனம் சார்பில், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபாவிடம் 3.75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.