காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சத்துணவு கூடம்
கிருஷ்ணராயபுரம்:மேட்டுத்திருக்காம்புலியூர், அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தில், காஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுத்திருக்காம்புலியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. நேற்று மதியம், 12:00 மணியளவில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக, பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில், சமையலர்கள் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து வெடித்தது. அப்போது சமையலர்கள் அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து காஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் ஏற்பட்டது. உடனடியாக குளித்தலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசு பள்ளி வளாகத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.