நுண் பார்வையாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம் நடந்தது.தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் குமார் ஸ்ரீவஸ்தவ் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் கூறியதாவது:மாவட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கு, 1,111 ஓட்டுச்சாவடி உள்ளது. 45 ஓட்டுச்சாவடி பதற்ற மானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில், 12 நுண்பார்வையாளர்கள், கரூர் தொகுதியில், 25, கிருஷ்ணராயபுரத்தில், 11, குளித்தலையில், 6 நுண்பார்வையாளர்கள் என மொத்தம், 54 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைமுறைகளை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் கண்காணிக்க, மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஓட்டுப்பதிவு நாள் பணி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு சரிபார்க்கும் கருவிகளின் செயல்முறை, மாதிரி ஓட்டுப்பதிவு, தேர்தல் ஆணைய விதிமுறைகள் மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் குறித்து விளக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு ஏஜென்டுகள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.பயிற்சி முகாமில், தேர்தல் பார்வையாளர்கள் ரம்யா, (அரவக்குறிச்சி), ராஜீவ் பிரசார் (கிருஷ்ணராயபுரம்), மனோஜ் குமார் (குளித்தலை), மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் விமல்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.