பள்ளப்பட்டி மாணவர்கள் கேரம் போட்டிக்கு தகுதி
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கேரம் போட்டியில், மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர். கரூர் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற பள்ளிகள் கலந்து கொண்டன. இதில், பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில், சிவனேசன் மற்றும் பூபதி ராஜா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதே போல, 19 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் இரட்டையர் பிரிவில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பிடித்தனர். 19 வயதுக்குட்பட்டோர் மாணவியர் ஒற்றையர் பிரிவில் ஹர்ஷினி பிரியா மூன்றாம் இடமும், இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பிடித்தனர்.