சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை
கரூர்: கரூர் மாவட்டம், கோதுார், குப்புச்சிபாளையம், மாங்காசோழிபாளையம், கள்ளிப்பாளையம், ஆத்துார் ஆகிய பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், டெக்ஸ்டைல், பஸ் பாடி நிறுவனங்கள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. கரூர் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை கோதுார் பகுதியின் சாலையின் இருபுறமும் கொட்டி செல்கின்றனர்.பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில் இருந்து கழிக்கப்பட்ட மரப்பலகை, கண்ணாடி துண்டு, பிளாஸ்டிக் பொருட்களையும் இப்பகுதியில் கொட்டி செல்கின்றனர். இதுமட்டுமின்றி சாலையில் சேரும் குப்பைகளை அகற்றாமல், அப்படியே தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர். பலருக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை அகற்றி, சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.