இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராக வேண்டி நாமக்கல் கட்சி ஆபீசில் திருவிளக்கு பூஜை
நாமக்கல், தமிழகத்தில், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெரும்பான்மை இடத்தில் வெற்றிபெற்று, இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராக வரவேண்டி, மாவட்ட மகளிரணி சார்பில், நாமக்கல் கட்சி அலுவலகத்தில், நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மாவட்ட மகளிரணி செயலாளர் வைரம் தமிழரசி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்து பேசியதாவது:வரும், 2026 சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை, இ.பி.எஸ்., தலைமையில் அமைப்போம். அதையொட்டி வரும், 7 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணம் வெற்றிப்பயணமாக அமைய, மகளிரணி சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இந்த ஐந்தாண்டு, தி.மு.க., ஆட்சியில் மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டம், வேதனைகளை, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, ஆறு தொகுதிகள் உள்ளன. அவற்றில் முழுமையாக அ.தி.மு.க., வெற்றி பெற்றுவிட்டது என்ற செய்தியை, இ.பி.எஸ்., காலடியில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மோகன், மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி செயலாளர் முரளிபாலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.