ஓசூரில் சின்னம்மை நோய் பாதிப்புவிழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
ஓசூரில் சின்னம்மை நோய் பாதிப்புவிழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில், பொது சுகாதார குழு கூட்டம் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் மாரிசெல்வி, மாநகர நல அலுவலர் அஜிதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், குழு தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது: ஓசூரில், சின்னம்மை நோய் பரவி வருகிறது. அதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் சரியான அளவில் இருப்பு உள்ளதா என கண்காணிக்க வேண்டும். நோய் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓசூர், அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், உறவினர்கள் தங்குவதற்கான கூடத்தில் தேவையான வசதிகளை செய்ய வேண்டும். ஓசூர் மாநகராட்சியில் இதுவரை, 3,216 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில், 100 கிலோவிற்கு மேல் சேரும் குப்பையை, அவர்களே தரம் பிரித்து, மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பது அரசு விதி. 100 கிலோவிற்கு மேல் குப்பை சேர்ந்தால், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றக்கூடாது. அவற்றை அகற்ற ஒரு டன்னுக்கு, 4,000 ரூபாய் சம்பந்தப்பட்ட நிர்வாகம் செலுத்த வேண்டும். ஓசூரில் அதிகரித்துள்ள, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டறிந்து, பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கவுன்சிலர்கள் ஆறுமுகம், மோசின் தாஜ், கலாவதி சந்திரன், லட்சுமி மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.