பழங்குடியின மேம்பாட்டிற்காக தேனீக்கள் வளர்ப்பு துவக்கம்
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், வனத்தை ஒட்டி வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கொடகரை சூழல் மேம்பாட்டு குழு நிதியிலிருந்து, அய்யூர் சூழல் சுற்றுலா மையத்தில், புதிய தேனீக்கள் வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டும் அலகு துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், 25 குடும்பங்கள் பயனடையும் வகையில், அவர்களுக்கு தேனீ பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் மேலும், 10க்கும் மேற்பட்ட மலை கிராம பகுதிகளில் செயல்படுத்தப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோர் சக்தி, விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் தேனீக்களின் பங்கு குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார். ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், உதவி வன பாதுகாவலர் பசவ்சிங், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன், கொடகரை சூழல் மேம்பாட்டு குழு தலைவர் முனிராஜ், கிரெஸ்ட் இந்தியா தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.