தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
கிருஷ்ணகிரி :பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:மழையால் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைத்து அதை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும். அப்பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.பாம்புகள் பிடிக்கும் நபர்களின் விபரங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள் விபரங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான சாதனங்களான பொக்லைன், மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு, 1077 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண், 04343 234444 என்ற எண்களை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் பேரிடர், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வன அலுவலர் பகான்ஜெகதீஷ் சுதாகர், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.