ஆர்டர் இருக்கா டோல்கேட் ஊழியர்கள் மீண்டும் அராஜகம்
திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவித்த நிலையில் 'ஆர்டர் இருக்கா' எனக் கேட்டு டோல்கேட் ஊழியர்கள் மீண்டும் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. கப்பலுார் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடந்தது. சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் பேச்சுவார்த்தை நடந்தது. 'உரிய முடிவு எடுக்கப்படும் வரை கட்டணம் வசூலிக்கக்கூடாது' என முடிவானது. இதை எழுத்துப்பூர்வமாக தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாமல் உள்ளூர் வாகனங்கள் செல்லும் நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் கட்டணம் கேட்டு ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். 'கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதற்கு ஆர்டர் இருக்கிறதா' என வாகன ஓட்டிகளிடம் 'எகத்தாளமாக' கேட்கின்றனர். இதனால் மீண்டும் போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது.