| ADDED : செப் 15, 2024 06:38 AM
மதுரை : மதுரையில் அனுமதியின்றி ஊன்றப்பட்ட 62 அடி உயர வி.சி.க. கொடி கம்பத்தை போலீசார் அகற்றியதால் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொடிக் கம்பம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.விடுதலை சிறுத்தை கட்சியை திருமாவளவன் துவக்கியபோது, அதன் நினைவாக மதுரை புதுாரில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன் ரோடு விரிவாக்கத்திற்காக அக்கொடி கம்பம் அகற்றப்பட்டது. இதற்கு மாற்றாக புதுார் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வி.சி.க.,வினர் 25 அடி உயர கம்பம் அமைத்து கொடியேற்றினர். இந்நிலையில் 62 அடி உயர மற்றொரு கொடி கம்பத்தை இப்பகுதியில் ஊன்றினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு போலீசார் அதை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் கனியமுதன், எல்லாளன், பாவரசு, தீபம் சுடர்மொழி, அரசமுத்துபாண்டியன் தலைமையில் 100 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் சங்கீதாவிடம் அவர்கள் முறையிட்டபோது, 'விதிப்படிதான் மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியும்' என தெரிவித்தார். நேற்று காலை அவரின் நேர்முக உதவியாளரை சந்தித்து, 62 அடி உயர கொடிக் கம்பத்தை ஊன்ற மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று மதுரை வந்த கட்சி தலைவர் திருமாவளவன், 'கலெக்டர் சங்கீதா பொறுப்பேற்ற நாளிலிருந்து வி.சி.க., எங்கு கொடி ஏற்றினாலும் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார். அவர் எங்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதுகிறோம்' என ஆவேசமாக கூறிய நிலையில், போலீசாருடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்தது.அதில், தற்போதுள்ள 25 அடி உயர கம்பத்தை அகற்றினால் 62 அடி உயர கம்பத்தை ஊன்ற அனுமதிக்கலாம்' என முடிவானது. இதை வி.சி.க.வினர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து நேற்று மாலை அவர்களிடம் கொடி கம்பம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து புதுாருக்கு வந்த திருமாவளவன், கொடி கம்பம் அமைய உள்ள இடத்தை பார்த்துவிட்டு செப்.20ல் ஏற்றுவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.