நியோமேக்ஸ் நிதி நிறுவன நிர்வாகி கடத்தலில் 5 பேர் கைது ரூ.3 லட்சம், கார் பறிமுதல்
வாடிப்பட்டி: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கார்த்திகேயன் 45, மதுரை நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகி. நேற்று முன்தினம் மதுரையிலிருந்து காரில் நாமக்கல் சென்றார். வாடிப்பட்டி அருகே மற்றொரு காரில் வந்த நியோமேக்ஸ் விற்பனை மேலாளர் திருச்சி தேவாவின் டிரைவர் பசுபதி உள்ளிட்டவர்கள் கார்த்திகேயனை கடத்தினர். இந்த கடத்தல் வழக்கில் பண பேரம் பேசி கை மாறியதும் திண்டுக்கல்லில் இறக்கிவிட்டனர். திண்டுக்கல் நகர் பகுதியில் போலீசை பர்த்ததும் மதுபோதையில் தப்பிக்க முயன்று அடுத்தடுத்த செக் போஸ்ட்கள், வாகனங்களில் இடித்து நிற்காமல் சாணார்பட்டி மலைப்பகுதிக்குள் சென்ற போது கிராமமக்களிடம் பசுபதி சிக்கினார். கடத்தல் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் திருச்சி பசுபதி 29, முத்துக்குமார் 31, கார்த்திக் 30, வீரகணேசன் 30, ஆனந்தகுமாரை 25, ஆகியோரை கைது செய்து ரூ.3 லட்சம், காரை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில்:இதில் பசுபதி நியோமேக்ஸ் நிறுவனத்தில் தேவா மூலம் ரூ.8 லட்சமும், சிலரை டெபாசிட் செய்யவும் வைத்துள்ளார். அந்நிறுவனம் முடங்கியதால் முக்கிய நிர்வாகியை கடத்தினால் பணம் பெறலாம் என கூறிய தேவா கடத்தலுக்கு மூளையாக இருந்துள்ளார். தேவா கைதுக்கு பின் தான் எவ்வளவு பணம் கைமாறியது என தெரியவரும் என்றனர்.