5 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை கலெக்டர், கமிஷனர், எஸ்.பி., ஆய்வு
மதுரை: சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கான மையங்களை மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஓட்டு எண்ணும் இடங்களை இப்போதே தேர்வு செய்து ஏற்பாடுகளை செய்யும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுக்களை எண்ணும் மையங்களை தயார் செய்ய வசதியான இடங்களை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். கடந்த லோக்சபா தேர்தலின் போது அரசு மருத்துவக்கல்லுாரியை தேர்வு செய்தனர். அப்போதே அங்கு மையம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அப்பிரச்னை சரிசெய்யப்பட்டு மையம் செயல்பட்டது. தற்போது சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, 10 தொகுதி ஓட்டுக்களையும் 5 மையங்களில் எண்ண உள்ளனர். இதையடுத்து கலெக்டர் தலைமையில் போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி. அரவிந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கநாதன், ஆர்.டி.ஓ.,க்கள் கருணாகரன், சங்கீதா, தேர்தல் தாசில்தார் இளமுருகன், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்தனர். ஒத்தக்கடை விவசாயக் கல்லுாரி, திருப்பரங் குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மதுரைக் கல்லுாரி, திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, கீழக்குயில்குடி அண்ணா பல்கலை மையங்களை ஆய்வு செய்தனர். ஓட்டு எண்ணும் பகுதி, ஓட்டுப்பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் அறைகள், பார்வையாளர் பகுதி உட்பட தேவையான வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.