10ம் வகுப்பு படித்த போலி பெண் டாக்டர் கைது
மதுரை:மதுரை அரசரடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.மதுரை, அரசரடி டி.பி., ரோடு சிட்டலாட்சி நகரில் எரோசா மருத்துவ மையம் உள்ளது. இதன் உரிமையாளர் இஸ்ரேல் எபினேசர். இங்கு டாக்டர் சிவா என்பவர் பணிபுரிவதாக அறிவிப்பு பலகை உள்ள நிலையில், மருத்துவம் படிக்காமல் மீனா, 49, என்பவர் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையிலான குழு நேரில் சென்றபோது, நோயாளிகளுக்கு மீனா மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை வீடியோ ஆதாரமாக பதிவு செய்து அவரிடம் விசாரித்தனர். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவம் பார்த்தது தெரிந்தது. செல்வராஜ் புகாரில் மீனாவை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.