உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பத்தல...பத்தல...: மதுரையில் ஆவின் பால் உற்பத்தி குறைவதாக புகார்

 பத்தல...பத்தல...: மதுரையில் ஆவின் பால் உற்பத்தி குறைவதாக புகார்

மதுரை : மதுரை ஆவினில் களப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறைந்து கொள்முதல் பாதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆவின் சார்பில் நாள் ஒன்றுக்கு 650 சொசைட்டிகளில் இருந்து 1.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இது 1.60 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் 1.41 லட்சம் லிட்டராக இருந்து தற்போது மழைக்காலம் என்பதால் 1.60 லட்சமாக லிட்டராக அதிகரித்தாலும் ஒட்டுமொத்தமாக கொள்முதல் குறைந்துகொண்டே வருகிறது. 2 லட்சம் லிட்டர் பால் தேவையாக உள்ள நிலையில் 40 ஆயிரம் லிட்டர் பால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஆவனில் போதிய களப் பணியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவின் அலுவலர்கள் கூறியதாவது: தினமும் உற்பத்தியாளர்களின் பாலை ஆங்காங்கே உள்ள 40 பி.எம்.சி.,களில் பெற்று, ஆவின் 'டேங்கர்' மூலம் மெயின் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பால் பதப்படுத்தப்படுகிறது. பின் பாக்கெட்டுகளாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க, தேவைக்கு ஏற்ப புதிய சொசைட்டிகளை உருவாக்க, உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளில் கறவை மாடு கடன் பெற்றுத்தர விரிவாக்க அலுவலர்கள் (இ.ஓ.,) நியமிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் இருந்த நிலையில் தற்போது 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதுபோல் மாடுகள் நலன்காக்க 6 கால்நடை மருத்துவர்கள் இருந்த நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். பண்ணை, ஆய்வக பிரிவுகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பி.எம்.சி.,களுக்கு சென்று 'ஸ்பாட் அக்னாலட்ஜ்மென்ட்' முறையில் பாலை தரம் ஆய்வு செய்து கொள்முதல் செய்யும் பணியும் பாதித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் பால் உற்பத்தி குறைந்துகொண்டே செல்கிறது. இதுபோல் அலுவலகப் பணிகளிலும் உதவியாளர், இளநிலை உதவியாளர். துணை மேலாளர், மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் 3 பிரிவுகளை ஒருவரே கவனிக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆவின் மேலாளர் வீராச்சாமி தீர்வுகாண வேண்டும் என்றனர்.

மதுரை - தேனி மீண்டும் இணைக்கலாம்

மதுரையில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் தேனி தனி ஆவினாக உருவாக்கப்பட்டது. ஆனால் அங்கு தற்போது பால் உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் லிட்டர் மட்டுமே விற்பனை உள்ளது. ஆனால் அங்கு பொது மேலாளர் உட்பட பலர் பணியில் உள்ளனர். இதனால் நிர்வாக ரீதியாக செலவு அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பால் பற்றாக்குறையை போக்க மீண்டும் மதுரை - தேனி ஆவினை ஒன்றாக இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை