உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனைவிக்கு வரதட்சணை கொடுமை போலீஸ் கணவர், மாமனார் மீது வழக்கு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை போலீஸ் கணவர், மாமனார் மீது வழக்கு

மதுரை:மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீஸ்காரர் பூபாலன், அவரது தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை, காதக்கிணற்றில் வசிப்பவர் பூபாலன், 35. இவர், மதுரை அப்பன்திருப்பதி ஸ்டேஷன் போலீஸ்காரர். இவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம், சாத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக உள்ளார். பூபாலன் மனைவி தங்கப்ரியா, 30.இருவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் குடும்ப பிரச்னை நீடித்து வந்த நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தன்னை துன்புறுத்துவதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது தங்கப்ரியா போலீசில் புகார் அளித்தார்.அதில் தெரிவித்துள்ளதாவது:திருமணத்தின் போது, 60 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், டூ வீலர் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டன. திருமண நாளில் இருந்து வரதட்சணை குறைவாக கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி மனதளவில் துன்புறுத்தினர். என் தம்பிக்கு சென்னையில், 70 லட்சத்திற்கு என் தந்தை வீடு வாங்கி கொடுத்தார். இதை சுட்டிக்காட்டி, மேலும் நகை, பொருட்கள் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தினர். ஜூலை 16ல் என் முகத்தில் கணவர் அடித்ததோடு, தலைமுடியை பிடித்து இழுத்து, கட்டிலில் மோத செய்து கழுத்தை நெரித்து மிரட்டினார். இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.காயமடைந்த தங்கப்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்படி, பூபாலன், அவரை துாண்டியதாக தந்தை செந்தில்குமார், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளிலும், பெண் வன்கொடுமை பாது காப்பு சட்டத்தின் கீழும் அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பூபாலன் நேற்று முன்தினம் முதல் இரண்டு நாள் விடுமுறையில் சென்ற நிலையில், நேற்று மாலை அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். செந்தில் குமாரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஆடியோவால் அதிர்ச்சி

பூபாலன் ஜூலை 16ல் மனைவியை தாக்கியது குறித்து தன் தங்கை அனிதாவிடம் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில், அவள் வாய் வீங்கி போயிருச்சு. முஞ்சியே மாறி போயிருச்சு. அந்தளவிற்கு பிராண்டிட்டேன். அவ பேசினாலே எரிச்சலா இருக்கு. அதான் வாயை மூடுடி மூடுடி என பொத்தி, நகத்தை வச்சு கீறினேன். ஓவரா கத்தினால்ல... தொண்டையை பிடிச்சு நெம்பிட்டேன். தொண்டை வலிக்குதுனு சொல்றா. கால வச்சு, 'லாக்' பண்ணதால முட்டி 'லாக்' ஆயிருச்சு. நொண்டி நொண்டி தான் நடக்குறா. உடம்பு அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. உடம்பை நல்ல பாம்பை சுருட்டி எடுத்து மாதிரி எடுத்துட்டேன். உதட்டுல வேற காயமா இருக்கு...' என உரையாடல் நீள்கிறது. இந்த ஆடியோ, தங்கப்ரியாவை, பூபாலன் எவ்வளவு கொடூரமாக தாக்கியுள்ளார் என்பதற்கு, அவர் வாக்குமூலமாகவே மாறிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ