உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மார்பக புற்றுநோயில் தமிழகத்திற்கு முதலிடம் ஆரம்ப நிலையில் கண்டறிவதே தீர்வு

மார்பக புற்றுநோயில் தமிழகத்திற்கு முதலிடம் ஆரம்ப நிலையில் கண்டறிவதே தீர்வு

மதுரை: பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 25 சதவீதத்துடன் மார்பக புற்றுநோயில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டதில் 23 சதவீத அளவிற்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்கள் வருகின்றன. உலகளாவிய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும் 23 சதவீத அளவு மார்பக புற்றுநோய் உள்ளது. தமிழகமானது 25 சதவீதத்துடன் மார்பக புற்றுநோய் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆரம்பநிலையில் 'மேமோகிராம்' பரிசோதனையில் கண்டறிந்தால் மார்பகத்தை அகற்றாமல் குணப்படுத்தலாம் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைத்தலைவர் எம்.ரமேஷ். அவர் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.ஏ.ஆர்.சி., 'குளோபோகான்' இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. 2022 மற்றும் 2024 ல் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் மார்பக புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது உறுதியாகிறது. 40 வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண் என்பது முக்கிய காரணம். முதுமை, குடும்ப ரீதியான பாதிப்பு, 10 வயதுக்கு குறைவான நிலையில் பூப்படைதல், 50 வயதுக்கு மேல் தாமதமாக மாதவிடாய் நிற்பது போன்ற காரணங்களால் இந்நோய் வரலாம். உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பழக்கம், 35 வயதுக்கு மேலான குழந்தைப்பேறு, பாலுாட்டாதிருத்தல் போன்றவையும் காரணங்கள் என்றாலும் இவற்றை எளிதாக தவிர்க்கலாம். மார்பக புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இருந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். இதை ஆரம்ப நிலையில் எளியமுறையில் கண்டறியலாம். அதற்கான அதிநவீன பரிசோதனை (மேமோகிராம்) கருவிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் உள்ளதால், பெண்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை