உழவர் சந்தையில் 51 டன் காய்கறிரூ.20.10 லட்சத்திற்கு விற்பனை
உழவர் சந்தையில் 51 டன் காய்கறிரூ.20.10 லட்சத்திற்கு விற்பனைநாமக்கல்:மாசி மாதம் முகூர்த்த சீசனை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 51 டன் காய்கறி, பழங்கள், 20.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். தற்போது, மாசி மாத முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 201 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதன்படி, 43,260 கிலோ காய்கறிகள், 8,620 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 51,900 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 10,380 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 20 லட்சத்து, 10,620 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 14 ரூபாய், கத்தரி, 30 ரூபாய், வெண்டை, 32 ரூபாய், புடலங்காய், 25 ரூபாய், பீர்க்கங்காய், 48 ரூபாய், பாகற்காய், 30 ரூபாய், சின்ன வெங்காயம், 45 ரூபாய், பெரிய வெங்காயம், 40 ரூபாய், இஞ்சி, 60 ரூபாய், பூண்டு, 115 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.