சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதால் வாழ்வாதாரம் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க மனு
நாமக்கல், நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலுார் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில், சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, வாடகை வாகனமாக இயக்குவது, 2024ம் ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தெரிவித்தால், 'வாகனத்தில் வரும் பயணிகள் வாடகைக்கு தான் எடுத்து வருகிறோம்' என்று கூறினால் மட்டுமே எங்களால் அபராதம் விதிக்க முடியும் என்கின்றனர். இதேநிலை நீடித்தால், தற்போது நடைமுறையில் உள்ள வாடகை வாகனங்கள் அனைத்தும் சொந்த பயன்பாட்டு வாகனமாக மாற்றி, வாடகைக்கு இயக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். மேலும், சொந்த பயன்பாட்டு வாகனங்களில் பம்பர் மற்றும் எல்.இ.டி., விளக்கு வைத்து கொண்டு, அதிகளவில் வாடகைக்கு வாகனத்தை இயக்குகின்றனர். அதனால், உரிய நடவடிக்கை எடுத்து, வாடகை வாகனம் வைத்திருக்கும் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.