குவாரி கருத்து கேட்பு கூட்டம்கட்சியினர் விமர்சனம்; அதிகாரிகள் அதிர்ச்சி
தாராபுரம், டிச. 4-தாராபுரம் தாலுகாவில் மணக்கடவு, பச்சாபாளையம் பகுதியில், ஐந்து கல் குவாரி இயங்கி வருகிறது.இந்நிலையில் அதே பகுதியில் புதிய குவாரி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கருத்து கேட்பு கூட்டம் தாராபுரம் பைபாஸ் சாலையில் நேற்று நடந்தது.சிறப்பு துணை ஆட்சியர் குமரராஜன் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நீலமேகம் முன்னிலை வகித்தனர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.குவாரி உரிமையாளரிடம், அதிகாரிகள் விலை போய் விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.