வாகன அசல் ஆவணங்களை தராத விற்பனையாளர் இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல்:'வாகனத்தின் அசல் ஆவணங்களை தராத விற்பனையாளர், வாடிக்கையாளருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன் மனைவி மாதேஸ்வரி, 53. இவர், டூ-வீலர் வாங்க, 2021 மார்ச்சில், ஈரோடில் உள்ள, 'லோட்டஸ் ஏஜென்சி' ஷோரூமை அணுகியுள்ளார். அங்கு, 63,509 ரூபாய் மதிப்புள்ள, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் பிளஸ்' வாகனத்தை தேர்வு செய்து, 10,000 ரூபாய் முன்பணம் செலுத்தினார்.மீதமுள்ள பணத்தை, ஈரோடில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்த பின், அசல் ஆவணங்களை மாதேஸ்வரி கேட்டுள்ளார். அப்போது, 'கடனுக்காக அசல் பதிவு சான்றிதழை வங்கியில் கொடுத்து விடுவோம்' என, வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அசல், வட்டியை முழுதும் செலுத்திய பின், வங்கிக்கு சென்று அசல் ஆவணங்களை கேட்டபோது, 'தங்களிடம் அசல் ஆவணங்கள் இல்லை' என, வங்கி நிர்வாகம் தெரிவித்தது. வாகன விற்பனையாளரை அணுகி கேட்டபோது, வங்கியில் கொடுத்து விட்டதாக தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரி, 2024 மே மாதம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், வங்கி மற்றும் வாகன விற்பனையாளர் மீது வழக்கு தொடுத்தார்.நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், வழக்கை விசாரித்து, அசல் பதிவு சான்றிதழை வைத்துக்கொண்டு தர மறுக்கும் விற்பனையாளரின் செயல், நேர்மையற்ற வர்த்தக நடைமுறையை நிரூபணம் செய்கிறது. அதனால், நான்கு வாரத்துக்குள் அசல் ஆவணங்களை, வழக்கு தாக்கல் செய்துள்ள மாதேஸ்வரிக்கு, வாகன விற்பனையாளர் வழங்க வேண்டும். மேலும், மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என, நேற்று உத்தரவிட்டனர்.