புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை
நாமக்கல்:புனித வெள்ளியையொட்டி, மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவை பாதை நிகழ்ச்சி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும், 40 நாட்களை, தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்களின் பாவங்களுக்காக, தன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்கள், தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு, இயேசுவின் பாடுகளை நினைவு கூறுவர்.புனிதவெள்ளி என்றால் தவம். கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் புனிதமான நாள். இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதை குறிக்கும் நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில், நேற்று புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில், சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.அப்போது, கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தில், மூன்று மணி நேர தியான ஆராதனை நடந்தது. அதேபோல், மோகனுார் அடுத்த பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செசீலி ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த சிறப்பு ஆராதனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில், இயேசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில், நாளை (ஏப்., 20) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அன்று அதிகாலையில், அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.