மே 12ல் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் துவக்கம்
மோகனுார்:வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் குண்டம் விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், தேர்த்திருவிழா, குண்டம் இறங்கும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, கோவில் பின்புறம் உள்ள சிங்கார பாறையில் உள்ள பாலியில் நீராடப்பட்டு கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் முன் நடப்பட்டது.தொடர்ந்து, வரும், 5 முதல், தினமும் இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், தினமும், காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபடுகின்றனர். வரும், 11 இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 12 அதிகாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், தீக்குண்டம் அமைக்கும் பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, பாலப்பட்டி கொமராபாளையம் காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி, 5 கி.மீ., துாரம் நடந்து வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும், உருளு தாண்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை கோவிலை சுற்றி வருதல் என, பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுகின்றனர். மே, 13 காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 14 மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.