வெளி மாநில சுற்றுலா பயணியர் வருகை குறைவு
குன்னூர்: கேரளாவில் மழை மற்றும் கர்நாடகாவில் காவிரி பிரச்னை காரணமாக, குன்னூர் சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி உட்பட ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேசமயம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மழையின் தாக்கம் இல்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது. இந்த காலகட்டத்தில், கர்நாடகா, கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தரும் நிலையில், கர்நாடகாவில் காவிரி பிரச்னையாலும், கேரளாவில் மழையினாலும் தற்போது சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் போன்ற சுற்றுலா மையங்களில் தமிழகம், வட மாநில சுற்றுலா பயணியர் குறைந்தளவில் வந்துள்ளனர். சுற்றுலா மையங்களில் உள்ள கடை வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.