2,500 பிளாஸ்டிக் பாட்டில்களில் ஐ லவ் ஊட்டி செல்பி பாய்ன்ட்
ஊட்டி : ஊட்டியில், 2,500 குடிநீர் பாட்டில்களை கொண்டு, 'ஐ லவ் ஊட்டி' என்ற 'செல்பி பாய்ன்ட்' அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த, துாய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டு, 10 ஆண்டுகளான நிலையில், இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.அதில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, ஊட்டி நகராட்சி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளால் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டிகளை சேகரித்து, பல்வேறு அலங்கார பொருட்களை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 2,500 குடிநீர் பாட்டில்களை கொண்டு, ஊட்டி சேரிங்கிராஸ் ஆடம்ஸ் நீரூற்று முன்பு, 'ஐ லவ் ஊட்டி' என வடிவமைத்து, 'செல்பி பாய்ன்ட்' ஒன்றை காட்சிப்படுத்தினர். இதன் அருகே சுற்றுலா பயணியர் நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சிகளிலும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இது போன்ற அலங்கார வடிவமைப்புகளை காட்சிப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.