தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை முகாமில் பராமரிப்பு
கூடலுார், ; - கோவை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.கோவை வனக்கோட்டம், துடியலுார் பிரிவு, தடாகம் வடக்கு பகுதியில், தாயை பிரிந்த, ஒரு மாதம் பெண் யானை குட்டியை கடந்த, 24ம் தேதி வனத்துறையினர் மீட்டனர். அதனை யானை கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து, 'முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும்,' என, மாநில முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார். தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வன ஊழியர்கள், பூஜை செய்து குட்டி யானையை பராமரிப்புக்காக கராலுக்குள் கொண்டு சென்றனர்.முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும், குட்டி யானையுடன் தங்கி கண்காணித்து பராமரிப்பதற்காக விவேக், சிவன் என்ற இரண்டு ஊழியர்களை நியமித்துள்ளனர். வனச்சரகர் சிவக்குமார் கூறுகையில், ''குட்டி யானை ஆரோக்கியமாக உள்ளது. கால்நடை மருத்துவ குழுவினர் மேற்பார்வையில், இரண்டு வன ஊழியர்கள் உடனிருந்து பராமரித்து வருகின்றனர்.'' என்றார்.
குட்டி யானைக்கு 'ஹீட்டர்' வசதி!
குட்டி யானைக்கு, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மற்றும் பசிக்கும் நேரங்களில் 'லாக்டோஜன்' பால் பவுடர், குளுக்கோஸ், தண்ணீர் வழங்கி வருகின்றனர். தற்போது, குளிர்காலம் என்பதால், கராலினுள் ஹீட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை,மாலை நேரத்தில் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. குட்டி யானைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் அருகே வெளி நபர்கள் அனுமதிப்பதில்லை.