அன்னுார் : கணினி பயன்பாடு தேர்வு கடினமாகவும், கணினி அறிவியல் தேர்வு எளிதாகவும் இருந்ததாக பிளஸ் 2 மாணவர்கள் தெரிவித்தனர்.அன்னூர் வட்டாரத்தில், அன்னூர், சொக்கம்பாளையம், ஆனையூர், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி என ஆறு பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவ மாணவியர் இரண்டு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். நேற்று கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் பெற முடியும்
பிரணீஸ், கரியாம்பாளையம்.கணினி அறிவியல் பாடத்தில் 70 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் 15 கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்கள் ஒன்பது தரப்பட்டு ஆறு எழுதும் படி கூறியிருந்தனர். மூன்று மதிப்பெண் வினாக்களில் ஒன்பது வினாக்கள் தரப்பட்டு ஆறுக்கு பதில் எழுதும்படி கூறியிருந்தனர், இவை அனைத்தும் எளிதாக இருந்தது, அதிக மதிப்பெண் பெற முடியும். கட்டாய வினா கடினம்
கோகுல கண்ணன், கெம்ப நாயக்கன்பாளையம்.கணினி அறிவியலில், ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. இரண்டு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் தலா ஒரு வினா கட்டாய வினாவாக கொடுத்திருந்தனர். கட்டாய வினாக்கள் கடினமாக இருந்தன. எனினும் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. எளிதில் தேர்ச்சி பெறலாம்.கணினி பயன்பாடு பாடத் தேர்வு எழுதிய மாணவர்கள், இரண்டு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண்கள் மட்டும் எளிதாக இருந்தன. தேர்ச்சி பெறலாம். எனினும் கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற முடியாது என தெரிவித்தனர்.