உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை வழங்குவதில் இழுபறி! பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைத்தால் பயன் நிச்சயம்

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை வழங்குவதில் இழுபறி! பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைத்தால் பயன் நிச்சயம்

ஊட்டி: 'நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, பசுந்தேயிலைக்கான நிலுவை தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 30 ரூபாய் வழங்க கோரி, விவசாயிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.இதனால், தேயிலை விவசாயம் செய்து வந்த, 40 சதவீத விவசாயிகள் வேலை வாய்ப்புகளை தேடி சமவெளி மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தேயிலை தோட்டங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விலை நிர்ணய கமிட்டி

இந்நிலையில், பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், தேயிலை வாரிய செயல் இயக்குனர்; விவசாய சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். 'விலை நிர்ணய கமிட்டி மூலம் குன்னுார் தேயிலை வாரியம் மாதந்தோறும் அறிவிக்கும், பசுந்தேயிலைக்கான விலையை பல கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் முறையாக வழங்குவதில்லை,' என, தொழிற்சாலை உறுப்பினர்களான விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நிலுவை தொகை

சமீபத்தில், படுகதேச பார்ட்டி; அ.தி.மு.க., மற்றும் பல அரசியல் கட்சிநிர்வாகிகள் மற்றும் தமிழகஅனைத்து விவசாயிகள்சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில்,'மாவட்ட விலை நிர்ணய கமிட்டி மூலம் தேயிலை வாரியம் அறிவிக்கும் மாதாந்திர விலையை பல கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் முறையாக வழங்குவதில்லை; கடந்த அக்., மாதத்தில் தேயிலை கிலோவுக்கு, 24.50 பைசா அறிவிக்கப்பட்டது. ஆனால், 8க்கும் மேற்பட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கிலோவுக்கு, 21 ரூபாய் நிர்ணயம் செய்து உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த மாதத்திற்கான, 1.60 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்கவில்லை. அதன் பின்பும் இதே பிரச்னை பல தொழிற்சாலைகளில் தொடர்கிறது,' என, தெரிவிக்கப்பட்டது.

கடும் அதிருப்தி

தொடர்ந்து, டிச., 22 ம் தேதி முதல் சிறு விவசாயிகள் பசுந்தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், இதுவரை நிலுவை தொகை வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

சாதகமான முடிவு கிடைக்கும்?

படுக தேச பார்ட்டி நிறுவனர் தலைவர் மஞ்சை மோகன் கூறுகையில், ''எட்டு தொழிற்சாலைகளுக்கு வினியோகித்த பசுந்தேயிலை தேயிலைகளுக்கான, 1.60 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்கப்படாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகத்தை நிறுத்தியும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அடுத்த கட்ட போராட்டம் குறித்து திட்டமிட்டுள்ளோம். இந்நிலையில், மாவட்ட கலெக்டர், 30ம் தேதி (இன்று) பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதில், விவசாயிகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி