தினமலர் பட்டம் மெகா வினாடி-வினா போட்டி; அசத்திய கிரசன்ட் பள்ளி மாணவ, மாணவியர்
ஊட்டி; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்;பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில், ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவர்கள் உடனுக்குடன் பதில் அளித்து பரிசுகளை வென்றனர். 'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு வினாடி- வினா போட்டி பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், ஊட்டி கிரசன்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் நடந்தது. அதில், எஸ்.எஸ்.வி. எம் ., கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. கோ-ஸ்பான்சராக சத்யா ஏஜன்சி இணைந்துள்ளது. இதில், பள்ளி அளவில் வினாடி-வினா மாணவர்களுக்கான போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதிப்போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இதன்படி, நேற்று, ஊட்டி கிரசன்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் நடந்த, வினாடி-வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 80 பேர் எழுதினார். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 9ம் வகுப்பு மாணவி அஸ்வினி, எட்டாம் வகுப்பு மாணவன் லக்சந்த் முதலிடம் பிடித்தனர். எட்டாம் வகுப்பு மாணவன் கிரித்திக், 6ம் வகுப்பு மாணவன் சாய் நிகிலன் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஆல்ட்ரிஜ், துணை முதல்வர் ஜாய்சி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியைகள் வசுமதி, சுபாஷினி, பீனா, அமுத மொழி, உஷா, பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டம் இதழ் தேர்வுக்கான களஞ்சியம்...
பள்ளி முதல்வர் ஆல்ட்ரிஜ் கூறுகையில்,'' தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், மாணவர்களுக்கான பொது அறிவு சார்ந்து படைக்கப்பட்டுள்ளது. இதனை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கான களஞ்சியமாகவும் உள்ளது. மேலும், இந்த இதழில், கணிதம், அறிவியல், பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. மேலும், இதனை சார்ந்து, ஆண்டு தோறும் நடத்தப்படும், 'பட்டம்' வினாடி-வினா போட்டியால், மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுகிறது. இதில், பங்கேற்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இது போன்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல்வேறு போட்டிகளை 'தினமலர்' நிர்வாகம் தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள்,'' என்றார்.
கூடுதல் கல்வி தகுதி
மாணவர் லக்சந்த்:இந்த தேர்வு குறித்து பள்ளியில் அறிவிக்கப்பட்ட உடன், பட்டம் இதழை தேர்வுக்கு படிப்பதை போன்று படித்து வந்தேன். இதில், அறிவியல் சார்ந்த தகவல்கள் மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. பிற கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. இதனை எனக்கு கிடைத்த கூடுதல் கல்வி தகுதியாக எடுத்து கொள்கிறேன். மேலும், இலக்கணம் சார்ந்த தகவல்களும் இடம் பெற்று இருப்பதால், நாளுக்கு, நாள் இதனை படிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.