சாலையில் கிடந்த தங்க ஆபரணம்: உரியவரிடம் ஒப்படைத்த டிரைவர்
கூடலுார்: கூடலுார் தேவாலா அட்டி பகுதியில், சாலையில் கிடந்த பர்சில் இருந்த தங்க ஆபரணத்தை, உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.கூடலுார் தேவாலா அட்டியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரர். இவர் நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு தேவாலா அட்டியில் இருந்து, தேவாலா நோக்கி வந்தார். அப்போது சாலையோரத்தில் பர்ஸ் கிடந்துள்ளது.அதனை எடுத்து பார்த்தபோது, அதனுள் தங்க ஆபரணங்கள் இருந்தன. அவை, 'அப்பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமானது,' என, தெரியவந்தது. இது குறித்து, எஸ்.எஸ்.ஐ., திருகேஷ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., உஷா தேவி, உதவியுடன் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்த அருணாவை கண்டுபிடித்தனர். ஆட்டோ ஓட்டுனர் லிங்கேஸ்வரர், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை ஒப்படைத்தார். ஆட்டோ ஓட்டுனருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.