மசினகுடி வனப்பகுதியில் அனுமதியின்றி டிரோன் இயக்கம்: வனத்துறை விசாரணை
கூடலுார்; மசினகுடியில், அனுமதியின்றி 'டிரோன்' இயக்கி 'வீடியோ' எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின், வெளிவட்ட பகுதியான மசினகுடி வனக்கோட்டம் வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள, பாறு கழுகு, கழுதைப்புலி ஆகியவை மசினகுடி பகுதியில் மட்டும் ஓரளவு காணப்படுகிறது. வன விலங்குகளின் முக்கியமான இப்பகுதியில், டிரோன் கேமரா பயன்படுத்தி வீடியோ, புகைப்படங்கள் எடுக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கடந்த காலங்களில், டிரோன் கேமரா பயன்படுத்தி 'வீடியோ' புகைப்படங்கள் எடுத்த நபர்களை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், மசினகுடி மாயாறு சாலையை ஒட்டிய வனம், குடியிருப்பு பகுதியை, டிரோன் கேமராவில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் டிரோன் கேமரா பயன்படுத்தி வீடியோ எடுத்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், டிரோன் கேமரா பயன்படுத்தி வீடியோ புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி, அனுமதி இன்றி, டிரோன் கேமரா பயன்படுத்தி 'வீடியோ' எடுத்து வெளியிட்டது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்து, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.