டான்டீயில் தீ தடுப்பு கோடுகள் நிர்வாகம் முன்னெச்சரிக்கை
கூடலூர்: கூடலூரில், வனப்பகுதியில் ஏற்படும் வனத்தீ, தேயிலை செடிகளுக்கு பரவுவதை தடுக்க டான்டீ நிர்வாகம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடலூரில், அரசு தேயிலை தோட்ட கழக (டான்டீ) நிறுவனத்துக்கு சொந்தமாக பாண்டியார், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம் தேயிலை கோட்டங்கள் உள்ளது. இவைகள் வனம் மற்றும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஏற்கனவே, கோடையில் வனம், சாலையோரம் ஏற்பட்ட வனத்தீ, பரவி தேயிலை செடிகள் கருகிய சம்பவம் நடந்துள்ளது. இதனால், டான்டீ நிர்வாகம் நடப்பு ஆண்டு முன்னெச்சரிக்கையாக, டான்டீ தேயிலை தோட்ட எல்லையில், தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். இப்பணியில் டான்டீ தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'வறட்சியினால் வனப்பகுதிகளிலும், சாலையோரங்களில் வனத்தீ அபாயம் உள்ளது. அப்பகுதியில் ஏற்படும் வனத்தீ பரவி தேயிலை செடிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனை தடுக்கவே, தேயிலைத் தோட்ட எல்லைகளில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து, கண்காணித்து வருகிறோம்.' என்றனர்.