உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஷன் கடைகளில் துவரம் பருப்பில் கலப்படமா ? ஆய்வுப் பணியில் அதிகாரிகள் குழு

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பில் கலப்படமா ? ஆய்வுப் பணியில் அதிகாரிகள் குழு

ஊட்டி: நீலகிரியில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா,கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கூட்டுறவுத்துறை, மகளிர் சுய உதவி குழு,' என, மாவட்டம் முழுவதும் பகுதி நேரம், முழு நேரம் என, 400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த வட்டத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. சமீபத்தில் திண்டுக்கல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட துவரம் பருப்பில் பட்டாணி , துாசு கலப்படம் இருந்ததை அந்த மாவட்ட கலெக்டர் கண்டறிந்தார். இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கழக கிடங்குகள், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.அதன்படி , கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஒவ்வொரு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,''தமிழ்நாடு வாணிப கழகம, ரேஷன் கடைகளில் கலப்படம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு மாதந்தோறும், 190 டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை ஆய்வு மேற்கொண்டதில் கலப்படம் ஏது இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி