உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மக்காச்சோளம் சாகுபடி; பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

 மக்காச்சோளம் சாகுபடி; பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

உடுமலை: மக்காச்சோள பயிருக்கு, பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பல்லடம், குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த, 2025 - 26ம் ஆண்டில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சாகுபடி செய்த விவசாயிகள் போதிய மழை உரிய நேரத்தில் பெய்யாமல் இயற்கை முற்றிலும் ஏமாற்றி விட்டது. இதனால், கதிர் பிடிக்கும் பருவத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் பாதித்தன. மேலும், அமெரிக்கன் படை புழு தாக்கம், கடும் பனிப்பொழிவு, டிக்வா புயல் வந்த நேரத்தில் பருவ கால நிலை கடுமையாக மாறியது. அதனால் மக்காச்சோளம் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு தவறியதால், மக்காச்சோள பயிர்களை வன விலங்குகள் நாசம் செய்து, சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்காச்சோள விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, கூட்டுறவு அணி மாநில ஒழுங்கிணைப்பாளர் குப்புச்சாமி கூறியதாவது : மக்காச்சோள சாகுபடி செய்ய விவசாயிகள் தொழு உரம், உழவு, விதை சோளம், நடவு கூலி, களை எடுக்க ஆள் கூலி உட்பட, ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் செலவாகியுள்ளது. போதிய அளவு மழை பெய்யாமல், கடும் வறட்சி உள்ளிட்ட பல இயற்கை காரணங்களால், மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியை கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே, மாவட்டத்தில், மக்காச்சோள பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், முழு இழப்பீட்டுத்தொகை தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்று தர வேண்டும், என தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை