முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி மகாராஷ்டிரா மாநில பாகன்கள் பங்கேற்பு
கூடலுார், ; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், மகாராஷ்டிரா யானை பாகன்களுக்கு, 'கும்கி' யானைகளுக்கு பயிற்சி வழங்குவது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயை பிரிந்த அல்லது இழந்த குட்டி யானைகள் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.குட்டி யானை அதன் பாகன்கள் இடையேயான பாசத்தை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த காத்திகி கன்சால்வஸ் எடுத்து, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்துக்கு சிறந்த ஆவண படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. ஜனாதிபதி, பிரதமர் முதுமலைக்கு நேரில் வந்து, ஆவண படத்தில் இடம்பெற்ற குட்டி யானைகளை பார்த்து, பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டி சென்றனர். தொடர்ந்து, வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து பல பகுதிகளில் இருந்து வன ஊழியர்கள், யானை பாகன்கள் தெப்பக்காடு யானைகள் முகாமில் தங்கி பயிற்சி பெற்று செல்கின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மெல்காட் புலிகள் காப்பகம் யானைகள் முகாமிலிருந்து, யானை பாகன்கள், உதவியாளர்கள் கடந்த, 9ம் தேதி முதல், தொப்பக்காடு யானைகள் முகாமில், யானைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக, எட்டு பேர் பயிற்சி பெற்று சென்ற நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக, 7 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, வளர்ப்பு யானைகளின் குண நலன்கள், பராமரிக்கும் முறைகள், உடலில் அடிக்கடி ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, வளர்ப்பு யானைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்தும் முறைகள், உடல் எடையை பராமரிப்பது, உணவு வழங்கும் முறைகள், மஸ்து காலத்தில் ஆண் யானைகளை பராமரிக்கும் முறைகள், 'கும்கி' பயிற்சிகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி முகாம் நாளை நிறைவுபெறுகிறது.மகாராஷ்டிரா வனக்காப்பாளர் தர்மபால் கதம் கூறுகையில், ''வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு பயிற்சிகள் குறித்து வனத்துறையினர், பாகன்கள் சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி வளர்ப்பு யானைகள் பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.