முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா குன்னுாரில் அங்கப்பிரதட்சணம் கோலாகலம்
குன்னுார், ; நீலகிரி மாவட்டம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது.குன்னுார்வெலிங்டன் அருகே பேரட்டி கிராமத்தில் கடந்த நுாற்றாண்டுகளாக பால முருகன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.நேற்று நடந்த விழாவில், வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டம் சூழ்ந்த இடத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, படுக இன மக்கள் பாரம்பரிய வெள்ளையுடை அணிந்துவழிபாடு நடத்தினர். அதில், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் காவடி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.முக்கிய நிகழ்வாக, விநாயகர் கோவிலில் இருந்து முருகன் கோவில் வரை அரை கி.மீ., துாரம் வரை ஆண்கள் மட்டும் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தியது அனைவரையும் பரவசப்படுத்தியது. அதில், வெள்ளை உடையை தரையில் விரித்து அதில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் தேர் ஊர்வலம் நடந்தது. ஊட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர பால்குட, காவடி பெருவிழா நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற ஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, நேற்று காலை பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது. நகரில் முக்கிய வீதிகள் வழியாக வந்த காவடிகளுக்கு பக்தர்கள் பூஜை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கூடலுார் குசுமகிரி ஸ்ரீ குமரமுருகன் கோவில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது. அதிகாலை, 5:15 மணிக்கு கணபதி ஹோமம் காலை, 8:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், 9:30 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓவேலி சந்தனமலை முருகன் கோவிலில் உட்பட பல கோவில்களை சிறப்பு பூஜைகள் நடந்தது.இதேபோல, கோத்தகிரி சக்திமலை, தேன்மலை, காத்துகுளி மற்றும் நட்டக்கல் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது.