உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலை வழியாக இரவில் வாகனங்களுக்கு தடை; அரசு பஸ்களுக்கு மட்டும் அனுமதி உள்ளதால் பயணிகள் குஷி

முதுமலை வழியாக இரவில் வாகனங்களுக்கு தடை; அரசு பஸ்களுக்கு மட்டும் அனுமதி உள்ளதால் பயணிகள் குஷி

கூடலுார்; 'முதுமலை, பந்திப்பூர் வனச்சாலை வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவில் அரசு பஸ்சில் பயணிப்பது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது,' என, பயணிகள் தெரிவித்தனர்.முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதியில், இரவு நேரங்களில் வனவிலங்குகளின் பாதுகாப்யை கருத்தில் கொண்டு, இவ்வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், இரவு, 9:00 முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பயணிகள் வசதிக்காக, இரவில் இவ்வழியாக தமிழக, கேரளா, கர்நாடகா அரசு பஸ்கள் தலா இரண்டு மட்டும் இயக்கப்படுகிறது. அரசு பஸ் டிரைவர்கள், முதுமலை பந்திப்பூர் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கையெழுத்திட்டு கடந்து சென்று வருகின்றனர். இரவில் பிற வாகனங்கள் பயணிக்காததால், இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பகிறது. பயணிகள் கூறுகையில், 'அமைதியான வனப்பகுதியில், பயணிப்பது புதிய அனுபவமாக உள்ளது. மேலும், சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் யானை, மான்கள் போன்ற வனவிலங்குகளை ரசித்து செல்ல முடிகிறது,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலிகள் காப்பகம் வழியாக, இரவு, 9:00 மணி முதல், தனியார் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநில அரசு பஸ்கள் மட்டும் இரவில் அனுமதிக்கப்படுகிறது. கூடலுார் வழியாக கர்நாடக செல்லும் தனியார் வாகனங்கள், தொரப்பள்ளி பகுதியிலும்; கர்நாடகாவில் இருந்து நீலகிரி மற்றும் கேரளா வரும் தனியார் வாகனங்கள் பந்திப்பூர் புலிகள் காப்பக நுழைவுவாயில் பகுதியிலும் நிறுத்தப்படுகிறது. காலை, 6:00 மணிக்கு, சோதனை சாவடிகள் திறக்கப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !