தோட்டங்களில் புரூனிங் பணி
கூடலுார்: கூடலுார் பகுதியில், கோடை மழை ஏமாற்றியதால் கடந்த மாதம் வரை வறட்சியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்போதைய மழையை தொடர்ந்து இரவு மற்றும் காலை நேரங்களில் இதமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில், சிறு விவசாயிகள் 'புரூனிங்' பணியை துவக்கி உள்ளனர். தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'தேயிலை தோட்டங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 25 சதவீதம் தேயிலை செடிகளை 'புரூனிங்' செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். இப்பணிக்கு தற்போது மானிய உதவிகள் இல்லை. இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,' என்றனர்.