தேவாலா பழங்குடியினர் பள்ளியில் மாணவர் சட்டசபை தேர்தல்
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் உள்ளிட்ட, 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட, 7- அமைச்சர்கள், செயலாளர்கள் தேர்தல் நடந்தது.முதல்வராக, 9-ம் வகுப்பு மாணவர் ஹேமந்த்; துணை முதல்வராக அபிநயா தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், உணவுத்துறை, நேர மேலாண்மை உட்பட, 7 துறைகளுக்கு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை செயலாளராக தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன், மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் அமைச்சர்களின் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, அமைச்சரவைக்கு பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆசிரியர் முருகன் வரவேற்றார். நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூடலுார் அரசு கல்லுாரி பேராசிரியர் மகேஸ்வரன் பதவியேற்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், செயலாளர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின், பள்ளியில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆசிரியர் தவமுரளி நன்றி கூறினார்.