மேலும் செய்திகள்
மசினகுடியில் மழை; வனத்துறையினர் நிம்மதி
15-Mar-2025
கூடலுார்; முதுமலையில், தொடரும் கோடை மழையினால் வறட்சியின் தாக்கம் சற்று குறைந்தது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி கோட்டம் வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இங்கு, கோடை வறட்சியில், வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று சிமென்ட் தொட்டிகளை ஊற்றி வருவது வழக்கம். கடந்த ஆண்டு, இங்கு, எதிர்பார்த்ததை விட அதிகம் பருவமழை பெய்ததால், நடப்பு ஆண்டு, 'கோடையில் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு இருக்காது,' என, எதிர்பார்த்தனர்.ஆனால், நடப்பு ஆண்டு ஜன., முதல் கோடை மழை ஏமாற்றியது. மேலும், இரவு மற்றும் அதிகாலையில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம்பெயர்ந்தது. வனத்துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, வறட்சியான வன பகுதிகளில் உள்ள சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை மழை, தொடர்ந்து ஏமாற்றியதால் வனத்துறையினர் கவலை அடைந்திருந்தனர்.இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த வாரம் முதல் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. வறட்சியில் பிடியில் இருந்த முதுமலை வனப்பகுதி, பசுமைக்கு மாறி வருகிறது. வனத்தீ அபாயமும் நீங்கி உள்ளது. வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'நடப்பாண்டு கோடை மழை ஏமாற்றியதால் வனப்பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. வனத்தீ அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்த கோடை மழையினால், வறட்சியின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. வனப்பகுதியும் பசுமைக்கு மாறி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்த வனவிலங்குகள் பருவமழைக்கு முன்பாகவே இப்பகுதிக்கு திரும்ப வாய்ப்புள்ளது,' என்றனர்.
15-Mar-2025