அவல நிலையில் கழிப்பிடம்; பாதிக்கப்படும் பாதசாரிகள்
ஊட்டி ; 'ஊட்டி காபி ஹவுஸ் சாலையில் அவல நிலையில் உள்ள கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகர் காபி ஹவுஸ் சாலையில் நகராட்சி மார்க்கெட், அரசுசேட் மகப்பேறு மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி நவீன கழிப்பிடத்தை அமைத்தது. இதனை பராமரிக்காமல் விட்டதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் அவல நிலையில் கழிப்பிடம் உள்ளது. கழிப்பிடத்தை பயன்படுத்த வருபவர்கள் கடும் துர்நாற்றத்தால் வெளியேறி, திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத அவல நிலையால் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் கூறுகையில், 'ஊட்டி நகரில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பிடத்தை தரத்துடன் கட்டுவதுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது போன்று பராமரிப்பு இல்லாத கழிப்பிடங்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.