மாணவர்கள் பயன்பெற குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பந்தலுார்; அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற, 'ரெப்கோ' வங்கி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. பந்தலுார் அருகே, குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'ரெப்கோ' வங்கி பேரவை பிரதிநிதி கணேசன் பள்ளி நிர்வாகத்திற்கு ஒப்படைத்து பேசுகையில், ''அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மேம்பட, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் திறமை மிகுந்த ஆசிரியர்கள் கல்வி போதிக்கப்படும் நிலையில், அதனை மாணவர்கள் முறையாக கற்று, தங்களின் நேரத்தை வீணான வழிகளில் செலவிடுவதை தவிர்த்தால், எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு பயனுள்ள குடிமகனாக மாற இயலும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உடல் ரீதியாக பாதிக்க கூடாது என்ற நோக்கில், சுகாதாரமான முறையில் தண்ணீர் பருகும் விதமாக அரசு பள்ளிகளில் வங்கி, சி.எஸ்.ஆர்., நிதி மூலம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பராமரித்து மழை மற்றும் கோடை காலங்களில் சுகாதாரமான குடிநீர் பருக வேண்டும். சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் நிலையில், இது போன்ற திட்டங்களை முறையாக பயன்படுத்தி கொள்ள ஆசிரியர்களும் முன் வர வேண்டும்,''என்றார். இயந்திரத்தை பெற்று கொண்ட மாணவர்கள் வங்கி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் பஜித்குமார் நன்றி கூறினார். கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.