| ADDED : ஜூலை 28, 2024 04:26 AM
கமுதி : -கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்ட பக்தர்கள் காப்பு கட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருக்கின்றனர்.கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து 2000 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆடி முதல் தேதியில் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர். பக்தர்கள் கூறியதாவது:சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஆடி முதல் தேதியில் மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றேன். கோயிலில் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறும். தினந்தோறும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பின் சந்தன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றனர். விழாவில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக கருங்குளம் கிராம மக்கள் தங்கி இருக்கும் வெளி மாவட்ட பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். விழாவின் போது இன்னும் ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே கூடாரம் அமைத்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.