ராமேஸ்வரத்தில் இரவுநேர பஸ் சேவை ரத்தால் அவதி
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் மதுரை, திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரவு முழுவதும் அரசு பஸ்கள் வரும். ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 11:30 மணிக்கு பின் நள்ளிரவு 12:30 மற்றும் 1:30 மணிக்கு மதுரை, பட்டுக்கோட்டைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.இந்த இரவு பஸ்கள் மூலம் அவசர சிகிச்சைக்கு வெளியூர் செல்லவும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள் வெளியூர் செல்ல முடிந்தது. பல ஆண்டுகளாக இயங்கிய இந்த இரவு நேர பஸ்சை கடந்த இரு மாதம் முன் தமிழக அரசு ரத்து செய்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ராமேஸ்வரம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் செந்தில் போக்குவரத்து மேலாளரிடம் கொடுத்த மனுவில், ரத்து செய்த இரவு நேர அரசு பஸ்சையும், இரவு 10:00 மணிக்கு மேல் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயில் வரை அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.