உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பயணிகள் பஸ் நிழலில் தஞ்சம் ஆக்கிரமிப்புக்கு யார் பொறுப்பு

பரமக்குடி பயணிகள் பஸ் நிழலில் தஞ்சம் ஆக்கிரமிப்புக்கு யார் பொறுப்பு

பரமக்குடி, பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பஸ் நிழல்களை தேடி ஒதுங்கி நிற்கும் நிலையில் ஆக்கிரமிப்பு, விபத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. பரமக்குடி பஸ்ஸ்டாண்டிற்குள் தினந்தோறும் பல நுாறு பஸ்கள் வந்து செல்கின்றன. மதுரை, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஆரம்ப கட்டத்தில் இருந்த அதே நிலையிலேயே பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ஒருபுறம், பஸ்கள் எண்ணிக்கை மறுபுறம் அதிகரித்து வரும் சூழல் உள்ளது. இதன்படி நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.மேலும் மதுரை, ராமேஸ்வரம், சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து வியாபார ரீதியாகவும், விசேஷ நாட்களிலும் பல ஆயிரம் பேர் சென்று திரும்புகின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் 40 கடைகள் வரை இருக்கிறது. இந்த கடைகளுக்கு முன் பயணிகள் நிற்க இட வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் ஒட்டுமொத்த இடத்திலும் கடைகள் மற்றும் தெருவோர சிறிய கடைகள் ஆக்கிரமித்துள்ளது. இவற்றை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளோ எந்த சூழ்நிலையிலும் கண்டுகொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர்.பரமக்குடியில் சப்-கலெக்டர் இருந்தும் நகர் கட்டமைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நிற்கும் பயணிகள் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் பஸ் நிழலில் தஞ்சம் அடைகின்றனர்.மழை நேரங்களில் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு முறை பஸ்கள் வந்து செல்லும் போதும் ஒதுங்கி நிற்க நேர்வதால் ஆபத்தான சூழலில் பயணிகள் காத்திருக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற அவலங்களை சரி செய்ய ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ