ஊராட்சிகள் தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா: விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகள் தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி தோறும் வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த விவசாயிகள் வலியுறுத்தினர். திருவாடானை விவசாயிகள் கூறியதாவது: மனித சமுதாயத்திற்கு தேவையான உணவு பொருட்கள் போதுமான அளவிற்கு கிடைத்திட வேளாண் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளால் ஏராளமான திட்டங்கள் வேளாண் துறை, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கிறது. வழக்கமான விவசாய சங்க நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இதனால் கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எவ்வித விபரமும் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து குறைதீர்க்கும் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். அதிகாரிகள் அழைத்தாலும் நேரம் வீணாகும் என்பதால் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு சில விவசாயிகள் செல்ல மறுக்கின்றனர்.இதனால் அரசு சார்பில் நடத்தப்படும் கூட்டங்களின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது. மாவட்டத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தினாலும் ஒவ்வொரு ஊராட்சி தோறும் வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தினால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும்.எனவே துறை அதிகாரிகளின் சரியான திட்டமிடுதலுடன், சம்பந்தப்பட்ட கிராமங்களில் முன்னறிவிப்பு செய்து விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும் என்றனர்.