மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 4ம் நாளாக 'ஸ்டிரைக்'
06-Oct-2024
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை, 4,000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கின்றனர். ராமேஸ்வரம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை இந்திய கடல் எல்லை 13 முதல் 21 நாட்டிக்கல் மைல் கொண்டுள்ளது. இதனால் இப்பகுதி மீனவர்கள் குறுகிய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது சில நேரம் மீன்வரத்திற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சித்ரவதை
இதனால் ராமேஸ்வரம் பகுதி உள்ளிட்ட தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி, படகுகளை கடற்படை கப்பலால் மோதி மூழ்கடித்து விடுகின்றனர். மீனவர்களை கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்தும் சித்ரவதை செய்கின்றனர். இலங்கையில் கடந்த 1984 முதல் 2009 வரை ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே உள்நாட்டு போர் நடந்த நேரத்தில் பாக் ஜலசந்தி கடலில் புலிகளின் கடற்படை பிரிவு வலுவாக இருந்தது.இதை பயன்படுத்தி இப்பகுதி மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்தனர்.இந்நிலையில், விடுதலை புலிகளின் தலைவர்கள் 2009ல் கொல்லப்பட்டதும், இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்கள் பக்கம் திரும்பியது.கடந்த 2009 முதல் தற்போது வரை 400 படகுகள், 3,000த்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த 2015க்கு பின் 300 படகுகள், 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதில், 2015க்கு முன் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இப்படகுகளை இலங்கை அரசு தேசிய உடைமையாக அறிவித்து உள்ளது.மேலும், கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு சிறையில் சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்காமல் கடுங்காவல் தண்டனை வழங்கியும், அபராதம் விதிக்கவும் துவங்கியது.இதனால் படகுகளை இழந்த உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து, கடனில் சிக்கி தவிக்கும் அவலம் ஏற்பட்டது.சிறை தண்டனை பெற்ற மீனவர்களை இரும்பு சங்கிலிகளால் பிணைத்தும், மொட்டையடித்தும் அவமானப்படுத்தி, தொற்று நோய், அம்மை நோயால் பாதிக்கும் அளவிற்கு சித்ரவதைக்கும் உள்ளாக்கி வருகிறது.இவர்களை விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும், 30 முதல் 60 நாட்கள் வரை இலங்கை அரசு சிறையில் அடைத்து விடுகிறது. தீர்வு தான் என்ன?
இந்தியா, இலங்கை உயர் அதிகாரிகள் முன்னிலையில் இருநாட்டு மீனவர்கள் பேச்சு நடத்தி வாரத்தில் இரு நாட்கள், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், மற்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கவும் உடன்பாடு ஏற்படுத்த வேண்டும்.இதனால், குறுகிய கடல் எல்லை கொண்ட பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு காண முடியும். இல்லையெனில், தமிழக மீனவர்கள் ஒடுக்கப்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் உள்ளது என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
06-Oct-2024